Nov 29, 2014

நிலாப்பால்



நிமிர்த்தி வைத்திருந்த
நிலவுக்குடுவையின்
வாய் பகுதியை வாகாய்
பற்றியிழுக்கிறது குழந்தை

வான் உறியிலிருந்து
ஒருக்களியும் குடுவையிலிருந்து
கொட்டுகிறது முளிதயிர்

குழந்தையின் வாய்க்குள்
சிக்கிய சிறுதுளி தவிர்த்து
மிஞ்சியதெல்லாம் பாய்கிறது பால்வெளியில்

பாயும் ஒளிக்கு
நீயும் நானும்  சூட்டிய பெயர்
நிலவொளி

*

நன்றி : ஓவியர் @Keshav முகநூல் நண்பர்

Nov 21, 2014

நதிமூலம்

நீங்களெல்லாம் ஒன்றுகூடி
துயரம் பகிர்ந்து
அடக்கம் செய்துவிட்டு களைந்துபோன பின்
வெளி, இருள்
ஒளி
நெருப்பு, நீர்
உயிர்
மண், மலை
விலங்கு
மரம், காற்று
பறவை
வான், கோள்
விண்மீன்
இவையாவும் ஒன்றுகூடி வந்து
என்னை
பங்கிட்டுக் கொள்ளும்

கருவறைக்குத் திரும்பிய
களிப்பில் இருப்பேன்
நான்

*


Nov 20, 2014

இறுதி ஊர்வலம்

இறந்த தட்டானை
சுமந்துச் செல்கின்றன எறும்புகள்
இரைக்காக இருக்கலாம் என
எதார்த்தத்தை எண்ணலாம்
இறுதி ஊர்வலம் என
கவிதைக் கண்ணால் பார்க்கலாம்
எதையுமே பொருட்படுத்தாமல்
கடந்தும் போகலாம்

*